வெளி மாநிலங்களுக்கு படிக்க செல்லும் மருத்துவ மாணவர்களுக்கு, 'கவுன்சிலிங்'

''வரும் கல்வியாண்டு முதல், வெளி மாநிலங்களுக்கு படிக்க செல்லும் மருத்துவ மாணவர்களுக்கு, 'கவுன்சிலிங்' வழங்கப்படும்,'' என, சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறினார்.


டில்லியை அடுத்த சண்டிகர் மருத்துவ கல்லுாரியில், பட்ட மேற்படிப்பு படித்து வந்த, தமிழகத்தை சேர்ந்த, டாக்டர் கிருஷ்ண பிரசாத், 24, தங்கியிருந்த விடுதியில், மர்மமான முறையில் துாக்கிட்டு இறந்து கிடந்தார். இது, சந்தேகத்தை ஏற்படுத்திஉள்ளது.இதேபோல, 2017ல், டில்லியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த, திருப்பூரை சேர்ந்த, இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர். முதலில், தற்கொலை என, வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின், 'எய்ம்ஸ்' மருத்துவ கல்லுாரி மாணவர், சரவணனின் வழக்கு, மர்ம மரணம் என, மாற்றப்பட்டது.  
வெளி மாநிலங்களில் படிக்கும், தமிழக மாணவர்கள், மர்மமான முறையில் இறப்பது தொடர்கிறது.இது குறித்து, சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:மாணவர் இறப்பு, துயரத்தை ஏற்படுத்திஉள்ளது. சம்பவம் பற்றி அறிந்ததும், அந்த மாநில மருத்துவ கல்வி இயக்குனரிடம், தொலைபேசியில் பேசினேன். மாணவர் இறப்பு குறித்து, உரிய விசாரணை நடத்தவும், அவரது உடலை, தமிழகம் கொண்டு வர உதவும்படியும் கோரியுள்ளேன். தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளும், அவரது பெற்றோருடன் சென்றுள்ளனர். 
முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களின், மன அழுத்தத்தை குறைப்பது குறித்தும், வெளி மாநிலங்களுக்கு செல்லும் மருத்துவ மாணவர்கள், அங்கே சந்திக்கும் சவால்களை எப்படி அணுகுவது என்பது குறித்தும், ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.வரும் கல்வியாண்டு முதல், வெளி மாநிலங்களில் படிக்க செல்லும் மாணவர்களுக்கு, மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில், 'கவுன்சிலிங்' நடத்தப்படும். மேலும், மூத்த பேராசிரியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு தொடர் ஆலோசனைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 
குடும்பத்திற்கு அரசு நிதியுதவி
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் கிருஷ்ண பிரசாத். இவர், ஹரியானா மாநிலம், சண்டிகரில் உள்ள, நேரு மருத்துவ கல்லுாரியில், முதுநிலை ஆராய்ச்சி படிப்பில், முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம், மருத்துவ கல்லுாரி விடுதியில், துாக்கிட்டு இறந்தார்.இதையறிந்த முதல்வர் பழனிசாமி, அவரது உடலை, சொந்த ஊருக்கு கொண்டு வர, தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்படி, அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், மாணவனின் குடும்ப சூழ்நிலையை கருதி, அவரது குடும்பத்திற்கு, முதல்வரின் பொது நிவாரண
நிதியிலிருந்து, மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022