மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை குறித்த சந்தேகமா? உதவுகிறது மருத்துவக் கல்வி இயக்ககம்!


        ஜூன் 27-ம் தேதி (நேற்று) முதல், அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகள் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். மருத்துவச் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாட்டிலுள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் விநியோகிக்கப்படுகிறது.


விண்ணப்பத்தைப்பெற ரூ. 500-க்கு "The Secretary, Selection Committee, Kilpauk, Chennai - 10" (Payable at Chennai) என்ற பெயரில் வரைவோலை (Demand Draft) எடுத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு மனு கடிதம் கொடுத்து விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம். தாழ்த்தப்பட்டோர் (SC / SCA), பழங்குடியின இனத்தைச் சார்ந்த மாணவர்கள் வரைவோலை எடுக்கத்தேவையில்லை. இதற்குப் பதிலாக மனு கடிதத்துடன் சாதிச் சான்றிதழின் நகலையும் கொடுத்து இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
  
"விண்ணப்பம் ஆன்லைனில் வழங்கப்பட மாட்டாது. நேரில் மட்டுமே சென்று பெற்றுக்கொள்ள வேண்டும். அரசு விளம்பரங்களில் ஆன்லைன் வழியாகவும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவித்து இருந்தது. ஆனால் ஓஎம்ஆர் சீட்டைத் தரவிறக்கம் செய்ய முடியாது என்பதால் தற்போது நேரிடையாகவே விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்" என்கிறார் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் எட்வீன் ஜோ.
"மாணவர்கள் சேர்க்கை குறித்த மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் உதவித் தொலைப்பேசி சேவையினைத் தொடங்கியிருக்கிறது. மாணவர்கள் பெற்றோர்களுக்கு மருத்துவச் சேர்க்கை குறித்து விளக்கம் பெற 044- 28364822 / 044- 28361674 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம். இந்தச் சேவை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். சென்னையில் உள்ளவர்கள் கீழ்ப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள சென்னை மருத்துவக் கல்வி இயக்ககத்திற்கு நேரிலும் சென்றும் விளக்கம் பெறலாம்.
  
தகவல் சேவையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கத் துணை இயக்குநர் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு செயல்படுகிறது. இந்தச் சேவையில் மருத்துவச் சேர்க்கை குறித்து அனைத்துக் கேள்விகளுக்கும் விளக்கமளிக்கப்படும்" என்கிறார் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கூடுதல் இயக்குநர் மற்றும் மருத்துவக் கல்வித் தேர்வுக் குழுவின் செயலாளர் செல்வராஜன்.
ஜூலை 7-ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும். ஜூலை 8-ம் தேதி ஐந்து மணிக்கு விண்ணப்பம் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்கக அலுவலகத்துக்குள் சமர்ப்பித்து விட வேண்டும். விண்ணப்பம் பெறுபவர்கள் அரசு ஒதுக்கீடு என்று தனியாகவும், சுய நிதிக்கல்லூரிகளில் உள்ள மேனேஜ்மென்ட் ஒதுக்கீடு என்று தனியாகவும் விண்ணப்பிக்க வேண்டும். நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் உள்ள இடங்களுக்கு மத்திய சுகாதாரப் பணி இயக்குநரகம் மூலம் நடத்தப்படுவதால் இதற்கு என்று தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் மத்திய சுகாதாரப் பணி இயக்குநரக இணையதளத்தில் (www.mcc.nic.in) விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் வழங்கிய முதல் நாளில் மட்டும் 8379 விண்ணப்பங்கள் பெற்றிருக்கிறார்கள். இதில் 6542 விண்ணப்பங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கும், 1837 விண்ணப்பங்கள் தனியார் கல்லூரிகளில் உள்ள மேனேஜ்மென்ட் கோட்டாவுக்கானது. விண்ணப்பம் பெறுவதற்கு இன்னும் பத்து நாள்கள் இருக்கின்றன. ஆகையால், கடந்த ஆண்டை விடப் பல மடங்கு அதிகளவில் விண்ணப்பம் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதுவரை தமிழ்நாட்டிலிருந்து குறிப்பிட்ட அளவு மதிப்பெண் பெற்றவர்களின் விவரங்கள் எதுவும் இல்லை என்பதால் நீட் தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் (கட் ஆஃப்) பெற்றிருப்பவர்கள் அனைவரும், அனைத்துப்பிரிவுகளுக்கும் தனித்தனியே விண்ணப்பிப்பது நல்லது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022