மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம்...குறைகிறது! பள்ளிகளில் ஊக்கமளிக்காததால் விபரீதம்

மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம்...குறைகிறது! பள்ளிகளில் ஊக்கமளிக்காததால் விபரீதம்-DINAMALAR

             கடலுார்: பள்ளிகளில் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் விளையாட்டு நேரம்  வெகுவாக குறைந்துவிட்டதால் போட்டிகளில் ஜொலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
.


         'மாலை முழுவதும் விளையாட்டு' என்று பாரதி பாடினார். அதன்படி இன்றைய கல்விக்கொள்கையில் பள்ளிகளில் விளையாட்டை யாரும் கடைபிடிப்பதாக தெரியவில்லை. உலகளவில் மக்கள் தொகையில் இரண்டாவது இடத்திலுள்ள இந்தியா ஒலிம்பிக்கில் 2 பதக்கத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் அடிப்படையில் பள்ளிகளில் இருந்து தான் உருவாக வேண்டும். காலை, மாலை என எந்த நேரமும் படிப்பு, மார்க் என மாணவ மாணவியர்களை கசக்கி பிழியும் கல்வி நிறுவனங்கள் வியாபித்துவிட்டதால் விளையாட்டு என்பது பின்னுக்கு தள்ளப்படும் நிலைதான் தொடர்ந்து நீடிக்கிறது.
அரசு தொடக்கப் பள்ளியில் இருந்து மேல்நிலை பள்ளிகள் வரை பிள்ளைகள் விளையாடி மகிழ விளையாட்டு உபகரணங்களை வாங்க பள்ளிகளுக்கு அரசு நிதி உதவி வழங்குகிறது. இதை தலைமை ஆசிரியர்கள் முறையாக செலவிடுவதில்லை. கல்வியாண்டு துவக்கத்தில் விளையாட்டு பொருட்கள் வாங்கியதாக 'பில்' வைக்கப்படுகிறது. இறுதியாண்டில் பொருட்கள் பழசாகிவிட்டதால் ஏலம் விட்டதாக கணக்கெழுதப்படுகிறது. இதை கல்வி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.
இதனால் மாணவர்களுக்கு விளையாட்டு நேரத்தையே குறைத்துவிட்டனர். பெயர் அளவில் நேரம் ஒதுக்கப்பட்டாலும், அந்த பீரியடையும் 'சிலபசை' முடிப்பதற்காக ஆசிரியர்கள் எப்போது கேட்பார்கள் என உடற்கல்வி ஆசிரியர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
பி.இ.டி., பீரியடில் மாணவர்களுக்கு விளையாட்டை கற்றுத்தருவதில்லை. தனியார் பள்ளிகளில் விளையாட்டை பற்றி கவலை கொள்ளாமல் மதிப்பெண்ணே பிரதானமாக கொள்ளப்படுகிறது.
இதன் காரணமாக கடலுார் மாவட்டத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய மிகப்பெரிய அண்ணா விளையாட்டு மைதானம் இருந்தும் மாநில அளவிலான போட்டிகளில் பெரிய அளவில் வெற்றி பெற முடியாமல் போய்விடுகிறது.
அண்மையில் கடலுாரில் நடந்த தடகளப்போட்டியில் ஒரு சிலவற்றில் மட்டும்தான் பரிசு பெற முடிந்தது. பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. அதிகமான பரிசுகளை வென்றது காஞ்சிபுரம், சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேநிலைதான் பிற மாவட்டங்களிலும் உள்ளது. எனவே மாணவ மாணவியர்களை பள்ளிகளிலேயே ஊக்கமளித்தால்தான் திறமையானவர்களை கண்டறிய முடியும் என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும். அப்போதுதான் நாம் உலக அளவில் ஜொலிக்க முடியும்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022